“நீங்க ஃபிரான்சிஸ் காலேஜ்ல தான படிக்கிறிங்க… இங்க எதுக்கு வந்து நிக்குறிங்க? எதுக்கு என் ஃப்ரெண்ட் கோமதிய பாத்துட்டு இருக்கிங்க?”
தனது கல்லூரி எதுவென அவளுக்குத் தெரிந்திருப்பதை அறிந்ததும் சரபேஸ்வரனுக்கு ஆச்சரியம்!
“உங்களுக்கு எப்பிடி நான் அந்த காலேஜ்னு தெரியும்?”
“காலைல டிக்கெட் எடுத்தப்ப சொன்னிங்கல்ல… அதை விடுங்க… எதுக்கு என் ஃப்ரெண்டை பாத்திங்க? லவ் பண்ணுறிங்களா அவளை?”
துடுக்குத்தனமாக அவள் கேட்க சரபேஸ்வரனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“ஐயயோ ஏன் இப்பிடிலாம் சொல்லுறிங்க?”
அவன் பதறியதும் சங்கவிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“அப்ப சும்மா சைட் அடிக்கிறிங்க… அவ்ளோ தானா? காசா பணமா? சைட் தான, அடிச்சுக்கோங்க… ஆனா இவ்ளோ ஓப்பனா சைட் அடிக்காதிங்க… அவ பாவம், பயந்துட்டா… அவ இருக்குற நிலமைய பாத்தா புட்டார்த்தி அம்மன் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போய் தண்ணி எறியணும் போல”
அவர்கள் பக்கங்களில் பெண்கள் காத்து கருப்பை கண்டு பயந்துவிட்டால் புட்டார்த்தி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று தண்ணீர் எறிந்து அதை விரட்டுவது வழக்கம்.
அதை அவள் குறிப்பிடவும் சரபேஸ்வரனுக்கு அவள் தன்னைக் கேலி செய்கிறாளோ என்ற சந்தேகம்.
சங்கவி சிரிப்பை அடக்க சிரமப்பட்ட வித்தில் அந்தச் சந்தேகம் உறுதியாகிவிட்டது.
நான் உன்னைப் பார்க்க வந்தேன் என சொல்லிவிடலாமா? அவன் யோசிக்கும்போதே ஆழியூர் செல்லும் நகரப்பேருந்து வந்துவிட சங்கவி பேருந்தில் ஏற ஓடிவிட்டாள்.
சரபேஸ்வரன் தொடர்ந்து ஏறியவன் முன்னே நின்றவளை பார்த்தபடியே பயணத்தைத் தொடர்ந்தான்.