“உன்னை நான் ரிஜக்ட் பண்ணுனப்ப காரணம் சொன்னேன்… சோ எனக்கும் காரணம் தெரியணும்” என்றான்.
தெரிந்துகொள்ளாமல் இங்கிருந்து நகரமாட்டேன் என சொல்லாமல் சொன்னது அவனது தொனி.
கீர்த்தனா அவனை கண்டாலே தடுமாறும் மனதை திடப்படுத்திக்கொண்டாள்.
அவனை நேருக்கு நேராக பார்த்தாள்.
“என்னோட சுயமரியாதை என்னைச் சம்மதிக்க விடல அபூர்வன்”
“வாட்?”
“ஏழு வருசத்துக்கு முன்னாடி நீங்களும் உங்க அப்பாவும் நொறுக்குனது என் காதலை மட்டுமில்ல, என் சுயமரியாதையையும் தான்…. அதுக்கு பதில் சொல்லாம நேரா பொண்ணு கேட்டா என்ன அர்த்தம்? என்னையும் என் ஃபேமிலியையும் உங்கப்பா பேசக்கூடாத வார்த்தை எல்லாம் பேசுனார்… நீங்க அதை வேடிக்கை பாத்துட்டு நின்னிங்க… பணம், அந்தஸ்து, குடும்ப பின்னணி இல்லனா அவங்க கேவலமானவங்களா? நீங்க யார் எங்க தகுதிய நிர்ணயிக்குறதுக்கு?”
கீர்த்தனாவின் கேள்வியிலிருந்த நியாயம் அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது, அனுக்ரஹா உட்பட. ஆனால் ஆரண்யனுக்கும் அவரது மைந்தனுக்கும் மட்டும் அது எடுத்தெறிந்து பேசுவதாக தோன்றியது.
ஒரிஜினல் ஆரண்யனுக்கும், அவரது கார்பன் காப்பிக்கும் அப்படி தோன்றியதில் ஆச்சரியம் ஏதுமில்லையே!
“ஏய்! பழசை பேசி டைவர்ட் பண்ணாத… நாங்க இங்க வந்தது கல்யாணப்பேச்சுவார்த்தைக்கு… நீ சம்மந்தமில்லாம ஏன் பழசை இதோட கனெக்ட் பண்ணுற? உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா? இல்லையா? அதுக்கு மட்டும் பதில் சொல்லு”
இப்போது கூட நடந்ததுக்காக இவன் வருந்தவில்லை. அபூர்வனின் இந்த செய்கை கீர்த்தனாவை அவனிடம் குரல் உயர்த்த வைத்தது.
“எனக்கு உங்களைப் பிடிக்கும்… ஆனா பிடிக்கிறதுக்காகலாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது… ஏழு வருசத்துக்கு முன்னாடி நடந்ததுக்காக உங்கப்பா மன்னிப்பு கேக்கணும்… அவரால எங்கம்மாவும் எங்கப்பாவும் துடிச்சாங்க, நான் அசிங்கப்பட்டேன்… அதை எல்லாம் மறக்கணும்னா அவர் என் பேரண்ட்ஸ் கிட்ட மன்னிப்பு கேக்கணும்… அவர் பேசுறதை கை கட்டி வேடிக்கை பாத்த நீங்க என் கிட்ட மன்னிப்பு கேக்கணும்”
“ஓ! இதெல்லாம் செஞ்சா நீ என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்ப… இது தான் உன்னோட டீலா?”
“இதுக்கு மேல எனக்குப் பேச பிடிக்கல அபூர்வன்”
நகரப்போனவளின் கரத்தை வேகமாக இழுத்துப் பற்றி நிறுத்தினான் அபூர்வன்.
“அபூ!
அவனது செய்கையில் அதிர்ந்த திருநாவுக்கரசர் அதட்டினார்.
“இது எனக்கும் இவளுக்கும் இடையில உள்ள பிரச்சனை தாத்தா… நாங்களே பேசி தீர்த்துக்குறோம்”
கீர்த்தனாவின் கையை விடாமலே “கொஞ்சம் தனியா பேசணும்… வா” என்றான் அவன்.
திமிறியவள் “அவசியமில்ல” என்றாள்.
ஏதோ சபையில் இருந்ததால் ஆரண்யன் மற்றும் அனுக்ரஹாவின் அலட்சியத்திலும் இவனது செயல்பாட்டிலும் தனது சுயமரியாதை விழித்துக்கொண்டு காதலை பின்னுக்குத் தள்ளிவிட்டது. தானும் பேசிவிட்டோம். தனியறை என்றால் இவன் சாமர்த்தியமாகப் பேசி தனது மனதை மாற்ற பார்ப்பான். ஏழாண்டுகளுக்கு முன்னர் நடந்த அவமானத்தை மறந்து தானும் அவனை மணக்கச் சம்மதித்துவிடுவோம். பின் காலம் முழுவதும் ஆரண்யனும் அனுக்ரஹாவும் அலட்சியம் செய்வதை தானும் தனது குடும்பமும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
தனது சுயமரியாதையைப் பற்றி கவலைகொள்ளாத இவன் அந்த அலட்சியத்தையும் கண்டுகொள்ளாமல் விடுவான். ஏன் வம்பு? இது தான் அவளது மனவோட்டம்.
“ஏன் பயமா இருக்கா?”
அவளது மனம் அறிந்தவனாக கேட்டான் அபூர்வன்.