“எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல தேவா. வேலை கொஞ்சம் அதிகம். கல்யாணத்துக்கு முன்னாடி நெருக்கி முடிச்சிடலாம்னு இதுலயே கவனமா இருந்துட்டேன். அதான் உன் கூட பேச முடியல.”
அவனது பதிலில் தேவயானி அமைதியானாள்.
“சரி! எதுக்கு நிக்குறிங்க? உக்காருங்க. இந்த மரியாதை எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமா குடுத்தா போதும்”
அவள் கேலியாகப் பேசுவதை அதிகப்பிரசங்கித்தனமாகவோ, மரியாதைக்குறைவாகவோ கருதாமல் உரிமைப்பேச்சாக எண்ணியது சரவணனின் உள்ளம்.
தனது கடையை முதல் முறையாகப் பார்க்கிறாள். அவளைப் போல நாற்காலியில் அமர்ந்து அழுக்குப் படாமல் செய்யும் வேலை இல்லை இது. ஆனால் கொஞ்சம் கூட கடையைப் பார்த்தோ சரவணனின் கைவிரல் ரேகைகளில் படிந்திருந்த கருப்பான ஆயில் கறையைப் பார்த்தோ அவள் அருவருப்படையவில்லை.
மாறாக ஒருவித மரியாதையோடு கடையை வலம் வந்தன தேவயானியின் விழிகள்.
“என்னடா இப்பவே அதிகாரம் தூள் பறக்குதுனு நினைக்குறிங்களோ? நீங்க நினைச்சாலும் எனக்குக் கவலை இல்ல. அத்தை உங்களை என் கண்ட்ரோல்ல வச்சுக்கணும்னு சொல்லிருக்காங்க”
“எங்கம்மாவா?”
“வேற யாரை நான் அத்தைனு கூப்பிடப்போறேன்? அவங்க தான்”
சுடிதார் துப்பட்டாவைச் சுழற்றியபடி சொன்னவள் மீது அன்னைக்கு இருக்கும் அன்பை அறியாதவன் இல்லை சரவணன்.
சுரேஷ் தேநீரும் வடையும் வாங்கி வந்து கொடுக்க பிகு பண்ணாமல் அதை வாங்கிக்கொண்டாள் தேவயானி.
“உங்கண்ணன் டீ குடிச்சிட்டாராம். நீ ஷேர் பண்ணிக்கிறியாடா?” என்று கேட்டுச் சுரேஷோடு தனது தேநீரையும் வடையையும் பகிர்ந்துகொண்டாள்.
“உனக்கு ஹாஸ்பிட்டலுக்குப் போக லேட் ஆகிடாதா தேவா?”
“அப்பிடி லேட் ஆச்சுனா நீங்க பைக்ல கொண்டு போய் விடுங்கண்ணே!” பதில் சொன்ன சுரேஷை முறைத்தான் சரவணன்.
அதில் அவன் பம்மவும் தேவயானி சிரித்தாள்.
சிரித்ததில் அவளுக்குத் தேநீர் புரையேறிவிட “ஹேய் கவனமா குடிக்க மாட்டியா?” என்று அவளது தலையில் தட்டினான் சரவணன்.
“அ…அது…”
தடுமாறியவளிடம் “இன்னைக்கு உன் கூட என்னால வரமுடியுமானு தெரியல. ஆனா நாளைக்கு நீயும் நானும் சேர்ந்து ரெட்டியார்பட்டி சாய்பாபா கோவிலுக்குப் போறோம். அங்க வச்சு உன் கிட்ட நிறைய பேசணும்” என்றான் அவன்.
தேவயானிக்கு அவன் தன்னோடு நேரம் செலவிட விரும்புவதே கொம்புத்தேனை நாக்கில் தடவியது போல மனமெல்லாம் இனித்துப்போனது. துள்ளலோடு அங்கிருந்து விடைபெற்றாள் அவள்.
அவள் போனதும் சுரேஷ் யோசனையோடு சரவணனைப் பார்த்தான்.
“என்னடா?” என அதட்டியவனிடம்
“மதினி கிட்ட இன்னும் சொல்லலையா?” என்று கேட்டான் கவலையோடு.
“ப்ச்! சொல்லுறதுக்கானச் சமயம் வாய்க்கலடா. ஆனா கண்டிப்பா நாளைக்குச் சொல்லிடுவேன்” என்றான் சரவணன் உறுதியோடு.