அரக்கு நிற மங்கலகிரி காட்டன் புடவை அணிந்து கூந்தலை இரு பக்கமும் எடுத்து க்ளட்சில் அடக்கி முதுகை மறைத்து விரித்து விட்டிருந்தாள். அடர்கூந்தலின் நடுவே மல்லிகைச்சரம் ஜம்மென்று அமர்ந்திருந்தது.
அவசரமேயில்லாமல் மெதுவாக ஆலயத்தை நோக்கிச் சென்றவளை முதலில் பார்த்தவன் ஆதித்யன்.
நடையில் நிதானம், ஒற்றை மடிப்பில் அணிந்திருந்த புடவை முந்தானையைப் பிடித்திருந்த இலாவகம், ஒல்லியுமில்லாமல் அதிகச் சதையுமில்லாமல் இருந்த நடுத்தர உடல்வாகு – இவை அனைத்தையும் தன்னைக் கடந்து அந்தப் பெண் போன சில வினாடிகளில் அவளது பக்கவாட்டுத்தோற்றத்தை வைத்து கிரகித்துக்கொண்டவன் சட்டென எழுந்தான்.
“ஹேய் பவி! நீ ஓடிப்போய் அந்தப் பொண்ணு கூட பேச்சு குடு”
பவித்ராவை விரட்டினான்.
அவளும் ஓடினாள். அந்தப் பெண்ணிடம் எதையோ சொல்வதைக் கவனித்தவாறு மூன்று ஆடவர்களும் அவர்களை நெருங்கினார்கள்.
“நாங்க சென்னைல இருந்து இந்த வேலையா வந்தோம்… ஆனா நாங்க புக் பண்ணுன இன்ஸ்டாக்ராம் இன்ஃப்ளூயன்சருக்கு ஏ.கே சொன்ன மாதிரி சரியான ரியாக்சன்ஸ் குடுக்க தெரியல நந்து”
முன்பே தெரிந்தவர்களைப் போல அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“பவி”
ஆதித்யனின் குரல் கேட்டதும் இருவரும் திரும்பினார்கள்.
பக்கவாட்டுத் தோற்றத்தை விட நேரில் பார்க்கையில் அழகாக, பாந்தமாக இருந்தாள் அந்தப் பெண். பவித்ரா அவளை அறிமுகப்படுத்தி வைத்தாள்.
“இவ நந்தினி… எங்க பெரியம்மா வீட்டுக்குப் பக்கத்து வீடு இவங்களோடது… லீவுக்கு இங்க வர்றப்பலாம் நானும் நந்துவும் செய்யாத சேட்டையே இல்ல”
பவித்ரா உற்சாகமாகச் சொல்லிக்கொண்டே போக ஆதித்யன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
“ஹாய்”
அறிமுகமாகிக்கொள்வதற்காக கை நீட்டினான் அந்த நந்தினியிடம்.
ஆனால் அஞ்சனவிழிகளிலோ மிதமிஞ்சிய சோகம் கப்பியிருந்தது.
‘கைகுலுக்குவது அவ்வளவு பெரிய தவறா?’