எல்லாமே நன்றாக நடந்தது. கார்த்திக் நந்தினிக்கு மோதிரம் போட்டுவிட ஆசைப்படும் வரைக்கும்.
அவர்களில் அந்த முறை பழக்கம் இல்லை என்றாலும் இப்போதெல்லாம் நிச்சயத்தில் மோதிரம் மாற்றுவது வழக்கமாகி விட்டதால் வாகீசனும் பெரிதாகக் கருதவில்லை. ஆனால் வைதேகி அவர் தான் கார்த்திக்கின் தாயார், அவருக்கு இதில் துளி கூட இஷ்டமில்லை.
அது எப்படி தன் மகன் மட்டும் அவளுக்கு மோதிரம் போட வேண்டும், பதிலுக்கு பெண்வீட்டார் அவனுக்கு போடாமலிருப்பர் என்று அதை வைத்துப் பிரச்சனையை ஆரம்பித்தார் அந்த பெண்மணி.
ராமச்சந்திரன் வழக்கம் போல வாய் மூடி மவுனம் காக்க, மூத்த மருமகள் மகாலெட்சுமி மாமியாரை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தாள்.
அவளது கணவனும் கார்த்திக்கின் அண்ணனுமான விக்னேஷ் கார்த்திக்கிடம்
“என்னடா பிழைக்க தெரியாதவனா இருக்க? நீ போட்ட மோதிரம் பிளாட்டினம்டா. அவங்க அதுக்கு பதிலா ஒரு குண்டுமணி தங்கம் கூட எக்ஸ்ட்ரா குடுக்கப் போறது இல்ல” என்று தம்பியின் காதை கடிக்க
கார்த்திக் பக்கத்தில் நின்று கொண்டிருந்த நந்தினியின் காதில் தெளிவாக விழுந்தது.
ஏற்கெனவே அவள் கண்ணுக்கு கார்த்திக்கின் வீட்டார் பணம்பிடுங்கிகளாகத் தெரிய விக்னேஷின் பேச்சு அந்த எண்ணத்தை இன்னும் வலுவாக்கியது.
அவள் அங்கே பரிதாபமாக நின்ற வாகீசனையும் சிவகாமியையும் பார்க்க அவர்களோ வருங்காலச் சம்பந்தியம்மாளை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தனர்.
ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாதவளாய் விரலில் அவன் போட்ட மோதிரத்தை கழற்றிய நந்தினி
“கார்த்திக்! இந்தாங்க. இதை நீங்களே வச்சுக்கோங்க. எங்க அப்பா இருக்கிற நிலமைக்கு அவரால பிளாட்டினம் ரிங் வாங்கிக் குடுக்க முடியாது. வாங்கலன்னா உங்க அம்மா கோச்சிப்பாங்க. அதுக்கு இதை நான் கழட்டிட்டா பிரச்சனை எதுவும் இல்லைங்க. பிடிங்க” என்று அவன் கையில் திணித்தாள்.
அதன் பின்னர் தான் வைதேகியம்மாள் அமைதியானார். அவரின் மூத்த மருமகளும் கொழுந்தனாரின் மூன்றுமாதச் சம்பளத்தைக் காப்பாற்றிய பெருமையுடன் போட்டோவிற்கு போஸ் கொடுக்கச் சென்றாள்.
ஆனால் நடந்த இந்த நிகழ்வுகளில் நந்தினிக்கு திருமணம் என்ற வார்த்தையே வெறுத்துவிட்டது.