“உனக்கு எப்ப இருந்து இந்த எண்ணம் வருது?”
“சென்னைக்கு வந்ததுல இருந்து… கடந்த பதினைஞ்சு நாளா”
“அதுக்கு முன்னாடி வரலையா?”
இல்லை என மறுப்பாய் தலையசைத்தாள் அவள்.
“அதுக்கு என்ன காரணம்னு யோசிச்சியா?”
மௌனம் அவளிடம்.
“சோ இந்த எண்ணம் தான் உன்னைத் தற்கொலைக்குத் தூண்டிருக்கு” கழுத்திலிருந்த கன்றிச் சிவந்த தடத்தைப் பார்த்தபடி கேட்டார் பிரியம்வதா.
இப்போதும் மௌனம் தான். ஆனால் வேதனையோடு தலையாட்டினாள் பாரதி.
தொடர்ந்து அவளுக்குத் தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதைப் பேசிப் புரியவைத்தார் பிரியம்வதா.
ஒரு தனிமனிதனின் தற்கொலை முடிவு அவனுக்கு வேண்டுமானால் பிரச்சனைகளிலிருந்து கிடைக்கும் விடுதலையாகத் தோன்றலாம். ஆனால் அவன் மீது அன்பும் நேசமும் வைத்திருப்பவர்களுக்கு அந்தத் தற்கொலை சொல்லவொண்ணா வேதனையைக் கொடுக்கும்
பிள்ளைகளின் தற்கொலைக்குப் பிறகு மனமுடைந்து குறுகிய காலத்தில் மரணித்த பெற்றோர்கள், மனைவியின் தற்கொலையால் கொடுமைக்காரன் பட்டத்தோடு விரக்தியாய் வாழும் ஆண்கள், மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக சமுதாயத்தால் பழிக்கப்படும் கணவன்மார்களைப் பற்றி எடுத்துச் சொன்னார் பிரியம்வதா.
“பாலாவ எல்லாரும் கொடுமைக்காரன், பொண்டாட்டிய சாவடிச்சவன்னு பழிச்சுப் பேசணும்னு நீ நினைக்குறியா?”
“இல்ல மேம்… இல்ல.. என்னால அவருக்கு எந்தக் கெட்டப்பேரும் வந்துடக்கூடாது… அவர் தங்கமான மனுசன்… நான் இனிமே சூசைட் பத்தி யோசிக்கமாட்டேன்” எனப் பதறி துடித்து கூறினாள் அவள்.
இன்றைய கவுன்சலிங்கை பொறுத்தவரை இது வெற்றியே. பாலாவை உள்ளே அழைத்தார் பிரியம்வதா. பாரதியை வெளியே சென்று அமரும்படி கூறினார்.
அவள் தயக்கத்துடன் போகவும் பாலா பிரியம்வதாவிடம் என்ன பிரச்சனை என விசாரித்தான்.